தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் சாவு
அவிநாசி அருகே பிச்சாண்டம்பாளையத்தில், தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பிச்சாண்டம்பாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர் பண்ணாரி (42), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி ராணி (35). இவர்களது மகன் மகேஷ்வரன் (5).
வீட்டிற்கு அருகே வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த மகேஷ்வரனை திடீரெனக் காணவில்லை எனக் கூறி, அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், பக்கத்து வீட்டில் திறந்த நிலையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மகேஷ்வரன் உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து சிறுவனின் உடலை மீட்டனர்.
சேவூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தச் சிறுவனின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.