புதுப்பையில் குடிநீர் கோரி பொதுமக்கள் 2 இடங்களில் மறியல்

வெள்ளக்கோவில் அருகே புதுப்பையில் குடிநீர் கோரி பொதுமக்கள் 2 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளக்கோவில் அருகே புதுப்பையில் குடிநீர் கோரி பொதுமக்கள் 2 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பகுதி வழியாக அமராவதி ஆறு சென்றாலும், அது தற்போது வறண்டு கிடக்கிறது. இப்பகுதியில், ஆழ்துளைக் கிணறுகளே தண்ணீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகின்றன. இங்குள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றில் பல மாதங்களாக மோட்டார் பொருத்தப்படாமல் உள்ளது. மற்றொரு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஏற்கெனவே நான்கு பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
மற்றொரு தொட்டிக்குக் குழாய் பதிக்கப்படவில்லை. இதனால் புதுப்பை கடைவீதி, தங்கமேடு, கைகாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை.
 இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் கூட, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்டோர் வெள்ளக்கோவில்-மூலனூர் சாலையில் 2 இடங்களில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com