உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளைப் பெற்றுப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணம் குறித்த விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (நவம்பர் 11) நடைபெற உள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித் தொகை (சமூக நலத் துறையின் மூலமாகப் பயன் பெறாதவர்), பெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை (சமூக நலத் துறையின் மூலமாகப் பயன்பெறாதவர்), காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம், விபத்தின் மூலமாக இறப்பு, இரண்டு கைகள், கால்கள் இழப்பு, ஒரு கை, கால் இழப்பு, மீட்க முடியாத அளவு கண்கள் பாதிப்பு, ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு, பக்கவாதம், பல்த்த காயம் மூலமாகக் கைகள் இழப்பு, இயற்கை மரணம், ஈமச் சடங்கு செலவு ஆகியவை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித் தொகை திட்டத்தில், தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் பல்தொழில்நுட்பப் பயிற்சி, கவின் கலை ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பட்டயப் படிப்பு, இளங்கலை பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அதுதொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி, முதுநிலை தொழிற்கல்வி, விடுதியில் தங்கி கல்வி பயில்வோர் மற்றும் விடுதியில் தங்காதோர் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனவே, பொது மக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.