போலிச் சான்றிதழ் மூலமாக அரசு வேலை வாங்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகராட்சி, நகராட்சியாக இருந்த போது தினக் கூலியாக வேலை பார்த்து வந்த சந்திரசேகர், கடந்த 2006-ஆம் ஆண்டு நிரந்தரப் பணியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் ஓர் ஆண்டுக்குள் பதவி உயர்வு கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், உரிய கல்வித் தகுதி இல்லை என கூறி, அவரது விண்ணப்பம் அப்போதைய நகராட்சி நிர்வாக அதிகாரியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 5 மாதங்களுக்குப் பின்னர், அந்த நபர் டிப்ளமோ இன் சிவில் என்ஜினியரிங் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி, போலியான சான்றிதழ் தயார் செய்து, மீண்டும் விண்ணப்பித்துள்ளார். அதன்படி, கடந்த 2007-ஆம் ஆண்டு அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரித்து, சட்டப் படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், போலிச் சான்றிதழ் தயாரித்து சட்டத்துக்குப் புறம்பாக அரசு வேலை பெற்று சம்பாதித்த பணம், பொருள், அசையும், அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர், மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பான புகார் முன்னதாக எழுந்தபோதே விசாரிக்கப்பட்டு, சில நாள்களுக்கு முன் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்' என்றனர்.