திருப்பூரில் ஏலச்சீட்டு மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து திருப்பூர், பாண்டியன் நகர், பிச்சம்பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதி பொது மக்கள் மாநகரக் காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
திருப்பூரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் மேற்கூறப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் சீட்டு போட்டிருந்தோம். சீட்டுக்குப் பணம் செலுத்திய வகையில், எங்களுக்கு ரூ.25 லட்சத்து 67 ஆயிரம் வரை அவர் பணம் கொடுக்க வேண்டும். எங்களுக்கு தர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். சிலருக்கு வங்கிக் காசோலைகள் கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை. கடந்த மாதம் 18-ஆம் தேதி சந்திரன் வீடு பூட்டி இருந்ததால், அவரது குடும்பத்தினரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் எடுத்துப் பேசவில்லை.
கடந்த 7-ஆம் தேதி அவரது குடும்பத்தினரிடம் கேட்ட போது, சந்திரனுக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், டிசம்பர் இறுதிக்குள் முழுத் தொகையும் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தனர். ஆனால், கடந்த 10-ஆம் தேதி தங்களால் பணம் தர இயலாது என்று, எங்கள் தொகையைக் குறைத்து மதிப்பிட்டு வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எனவே, மோசடியில் ஈடுபட்ட சந்திரன் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.