மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்காக பயனாளிகள் கண்டறியும் முகாம் காங்கயத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 16) நடைபெறவுள்ளது.
இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் நடைபெறும் இந்த முகாமில், தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், காதொலிக் கருவி, பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி கடிகாரம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள கேவிஏ திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 16) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் கலந்து கொள்ளும் பயனாளிகள் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையின் நகல், ஆதார் அட்டை நகல், முகவரிச் சான்றின் (குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை) நகல், இரண்டு புகைப்படங்கள், வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 044-40263636 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.