அவிநாசியில் கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி, வி.எஸ்.வி காலனியில் வசித்து வருபவர் மரியம்பீபி(41). பனியன் தொழிலாளி. இவரது மகன் அப்துல் கலாம்(16). அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறையானதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.
பாதுகாப்பு வேலி அமைத்தும் மாணவர்கள் குளிப்பதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சப்தம் போட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மாணவர் அப்துல் கலாமின் காலணி, பள்ளிச்சீருடை, சைக்கிள் உள்ளிட்டவை கிணற்றின் அருகிலேயே இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கிணற்றுக்குள் அப்துல் கலாம் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த அவிநாசி போலீஸார், தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அப்துல் கலாம் உடல் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.