அவிநாசியில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை காவலர் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி, முத்துச்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் கணேசன்(50). இவர் அவிநாசி அருகே நடுவச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார்.
இந்நிலையில் இவர் பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியரை இறக்கிவிடுவதற்காக முத்துச்செட்டிபாளையம் மாரியம்மன் கோயில் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார்.
அப்போது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு பெண் ஊழியரை இறக்கிவிட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அவிநாசி காவல் நிலைய காவலர் செல்லக்கண்ணு (27), அவரது நண்பர் குமார் ஆகியோர், பள்ளி வாகன ஓட்டுநர் கணேசனை தகாத வார்த்தையில், திட்டி தாக்கினராம்.
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காவலர் செல்லக்கண்ணு மது போதையில் இருந்தததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.