வெள்ளக்கோவில் அருகே ரூ. 35 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், குருக்கத்தியிலிருந்து கோட்டைவலசு வரை 2.1 கி.மீ. தொலைவு சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்க சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்பணியைத் தொடங்குவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு பங்கேற்று பணியைத் துவக்கிவைத்தார்.
வெள்ளக்கோவில் நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், துணைத் தலைவர் கே.ராஜலிங்கம், வேலப்பநாயக்கன்வலசு கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன், அதிமுக ஊராட்சி செயலாளர் கண்ணுச்சாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.