வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வேன் கவிழ்ந்த விபத்தில் வெளிமாநில கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.
வெள்ளக்கோவில், வீரசோழபுரம் பகுதியில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த பலர் வாடகை வீடுகளில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இருந்து முத்தூரில் நடைபெறும் கட்டட வேலைக்காக 7 பேர் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர். பின்னர் வேலைமுடிந்து அனைவரும் மாலை வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தொட்டம்பட்டியைச் சேர்ந்த செந்தில் (22) வேனை ஓட்டி வந்துள்ளார்.
முத்தூர், வேலம்பாளையம் பிரிவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்தது. இதில் வேன் அடியில் சிக்கி தொழிலாளி ஒமீஷ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 6 பேரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.