திருப்பூரில் வேலை செய்த வீட்டில் 10 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், 15-வேலம்பாளையம், சொர்ணபுரி ஹை-லேண்ட், 2-ஆவது வீதியைச் சேர்ந்தவர் பி.பாலமுருகன் (33). மனைவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபா (எ) அங்காளம்மாள் (40) வேலை செய்துவந்தார்.
வீட்டுக்குள் இருந்து முகமூடி அணிந்த நபர் ஒருவர் புதன்கிழமை காலையில் வெளியேறிச் சென்றதாக அங்காளம்மாள் பாலமுருகனிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பாலமுருகன் அருகில் உள்ள பகுதிகளில் அந்த நபரைத் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், அதற்கான அறிகுறிகள், தகவல்கள் கிடைக்கவில்லை. அதற்குள் பாலமுருகனின் தாயார் தனது 10 பவுன் தாலிக் கொடி காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, பாலமுருகன் 15 வேலம்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், அங்காளம்மாள் அந்த நகையைத் திருடிவிட்டு, அனைவரது கவனத்தையும் திசை திருப்பும் வகையில், தவறான தகவலை வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்து, தப்பிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அங்காளம்மாளைக் கைது செய்து, நகையை மீட்டனர்.