உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, பயனற்ற 4 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலை நகரில் கடந்த சில வாரங்களாக டெங்கு, மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொசுவால் ஏற்படும் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வீடுகளில் தேவையில்லாத பொருள்களில் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது எனவும், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பருவ மழை பெய்து வருவதால், உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள், டயர்கள் ஆகிவற்றில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை உ ருவாக்கும் கொசுப் புழுக்கள் பெருகுகின்றன.
எனவே, நகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் மூலம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி, தண்ணீர் தேங்கும் தேவையில்லாத பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உடுமலை நகர்நல அலுவலர் மருத்துவர் கே.சி.அருண் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பழனி சாலை, தாராபுரம் சாலை, திரு ப்பூர் சாலை, ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயன்படாத நிலையில் இருந்த 4,000 கிலோ டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.