உடுமலை, எஸ்.வி.புரத்தில், பூட்டியிருந்த வீட்டிலிருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயுள்ளன.
உடுமலை நகரை ஒட்டியுள்ள பகுதியான எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், அதே பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். தனது குடும்பத்துடன் வெளியூர் சென்ற செல்வராஜ், புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்திருப்பதைக் கண்டு செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். திருப்பூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.