உடுமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் விடுதியில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், மூணாறு அருகில் உள்ள கடலார் எஸ்.டி.ஆர். கிழக்கு டிவிஷன் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் பாஸ்டின்- பேபி. இவர்களது மகள் புஷ்பா ஏஞ்சலின் (19). உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் எதிரே உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
பிற்பகல் கல்லூரியில் படித்து வந்த இவர், புதன்கிழமை கல்லூரிக்குச் செல்லவில்லை. எனவே இவரது தோழிகள் புஷ்பா ஏஞ்சலினைத் தேடி விடுதிக்கு வந்தனர். ஆனால் விடுதியிலும் காணாததால்
சந்தேகம் அடைந்த தோழிகள்,
ஒவ்வோர் அறையாகத் தேடிய பின்னர் அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் புஷ்பா ஏஞ்சலின் த ண்ணீருக்குள் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு கல்லூரி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடுமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் புஷ்பா ஏஞ்சலினை தொட்டியில் இருந்து மேலே தூக்கியபோது அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டுசென்று புஷ்பா ஏஞ்சலினை உடுமலை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், புஷ்பா உயிரிழந்து விட்டதாகக் கூறினர். அப்போது நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அங்கு குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து போலீஸார் கூறியது:
உயிரிழந்த மாணவியின் வாயில் நுரை வந்துள்ளதைப் பார்க்கும்போது அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது விடுதி வார்டன் வெளியூர் சென்றிருந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். புஷ்பாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். உடுமலை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.