மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை கனமழை பெய்ததன் காரணமாக, பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலை. இங்கு புகழ் பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவக் குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் இங்குள்ள படகுக் குழாம், வண்ணமீன் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை ஆகியவற்றை ரசிக்கவும் தினசரி ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சலிங்கம் அருவியில் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.