வரி உயர்வுக்கு எதிர்ப்பு: தாராபுரம் நகராட்சியைக் கண்டித்து பேரணி
தாராபுரம் நகராட்சியின் வரி உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
நகர வரி செலுத்துவோர் சங்கம் சார்பில், தாராபுரம் புறவழிச்சாலையில் துவங்கிய பேரணிக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் சி.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாராபுரம் பொள்ளாச்சி சாலை, கடைவீதி வழியே சென்ற பேரணி, நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவுற்றது. பின்னர் நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சியில் கடந்த 2008-ஆம் ஆண்டு வரி உயர்த்தியபோது பிற நகராட்சிகளைக் காட்டிலும் பலமடங்கு வரி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரி உயர்வு குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தாராபுரம் நகராட்சி அதிக அளவில் வரி உயர்த்தியிருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.