காங்கயம் அருகே மின்னல் பாய்ந்து பெண் சாவு
காங்கயம் அருகே, மழைக்கு ஒதுங்கிய பெண் மின்னல் பாய்ந்ததால் புதன்கிழமை உயிரிழந்தார்.
காங்கயம் அருகே உள்ள கீரனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஷகீலா (32). இவர், அப்பகுதி பெண்கள் சிலருடன் மறவபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை தென்னை மரங்களுக்கு உரம் இடும் வேலை செய்துகொண்டிருந்தார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் லேசாக மழை பெய்துள்ளது.
வேலை முடிந்து அனைவரும் வீட்டுக்குச் செல்லத் தயரானபோது ஷகீலா ஒரு தென்னை மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவர் நின்று கொண்டிருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் ஷகீலா பலத்த காயமடைந்தார். அவரை, உடனடியாக காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறியதால், சடலத்தை வீட்டுக்கு கொண்டுசென்றனர். பின்னர் ஷகீலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காங்கயம் போலீஸார் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஷகீலாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.