பல்லடம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் தொழில் துறையினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பல்லடம் பகுதியில் விசைத்தறி, சைஸிங், நூற்பாலை, பின்னலாடை நிறுவனங்கள், சாய ஆலைகள், கல்குவாரி, கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஆர்டர்களை முடித்து தருவதில் தொழில் நிறுவனங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
இநிலையில், பல்லடத்தில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தொழிலாளர்கள் ஓரிரு நாளில், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு உள்ளனர். அதற்குள் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தொழில் நிறுவனத்தினர் உள்ளனர். தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி ஜெனரேட்டர் உதவியுடன் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலையில் தொழில்துறைனர் உள்ளனர்.
எனவே, தொழிற்சாலைகள் பாதிப்பு இன்றி இயங்கத் தடையில்லா மின்சார விநியோகத்தை பல்லடம், திருப்பூர் பகுதிக்கு ஏற்படுத்தித் தர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.