காங்கயம் அருகே, அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கொல்லன்வலசைச் சேர்ந்த முருகேசன் மகள் வசந்தி (18). இவர், காங்கயம், முள்ளிபுரம் அருகே உள்ள அரசுக் கல்லூரியில் படித்து வந்தார். பழனி செல்லும் அரசுப் பேருந்தில் சனிக்கிழமை கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். மதியம் 12.30 மணியளவில் கல்லூரி அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது இறங்குவதற்குத் தயாராக பேருந்தின் படிக்கட்டு அருகே நின்றுகொண்டிருந்தார். முள்ளிபுரம் பகுதி வளைவில் பேருந்து திரும்பும்போது எதிர்பாராத விதமாகப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து அவர் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு வசந்தி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.