விலைவாசி உயர்வைக் கவனத்தில் கொண்டு தீபாவளிக்கு தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சேகர் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார்.
இதில், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது,
திருப்பூரில் பனியன், பஞ்சாலை, டையிங், கலாஸ், உணவகம், கட்டடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தற்போது உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கவனத்தில் கொண்டு, கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்.
தீபாவளிக்கு 15 நாள்களுக்கு முன் போனஸ் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.