நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து திருப்பூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் குமரன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். பாஜக சிந்தனையாளர் பிரிவு மாநிலத் தலைவர் கனகசபாபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 2006-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் 312 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. பல பின்தங்கிய கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு முன் மருத்துவப் படிப்புக்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வுக்குப் பிறகு முற்றிலுமாக மாறியுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 94 இடங்கள் மட்டுமே கிடைத்தன. நடப்பாண்டு 135 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. நீட் விவகாரத்தில் திமுக எதிர்மறை அரசியலில் ஈடுபடுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டது.
கோட்ட இணைப் பொறுப்பாளர் பாயிண்ட் என்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.