மக்களுடன் இணைந்து தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும்: அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்புடன் அரசு அலுவலர்கள் தூய்மை இந்தியாவை உருவாக்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்புடன் அரசு அலுவலர்கள் தூய்மை இந்தியாவை உருவாக்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் மூலம் தூய்மை சேவை உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மை சேவை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியது:
தேசிய அளவில் வெள்ளிக்கிழமை தொடங்கி மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி வரை தூய்மை சேவை இயக்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒரு பணியினை மேற்கொண்டு, அதை முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப திருப்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ஒவ்வொரு பகுதியையும் தேர்வு செய்து திட்டப் பணிகளை பிரித்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகுதி வாரியாக பிரிக்கும்போது தூய்மைப் பணிகளை எளிதாக மேற்கொள்வதுடன், தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினை உடனே வழங்கலாம். இதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள், ஓவியங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்புடன் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தை வளாகங்கள், நீர் நிலைய மையங்கள், ஆலய வளாகங்கள் போன்றவற்றில் தூய்மைப் பணியினை மேற்கொள்வதுடன், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டு, ஒவ்வொரு பணியினையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் மரக்கன்றுகள் நடவு செய்து, நான்காண்டுகளுக்கு குறையாமல் பராமரிப்பு செய்தல், குளங்கள் சீரமைத்து மரக்கன்றுகள் நடுதல் பணிகளை மேற்கொள்வதுடன், மக்களுக்கு அவ்வப்போது உரிய விழிப்புணர்வு வழங்க முன் வர வேண்டும். திட்டமிட்டபடி அலுவலர்கள் 15 நாள்களுக்கு பணிகளை பிரித்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு தூய்மை இந்தியாவை உருவாக்கிட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாவட்ட அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியில்...: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொறியாளர் எம்.வி.டி.தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் தூய்மை சேவை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com