வெள்ளக்கோவிலை அடுத்த மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயிலில் குருப் பெயர்ச்சி மஹா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயில்ரங்கத்திலுள்ள தையல் நாயகி சமேத வைத்திய நாதேஸ்வரர் கோயில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தற்போது, கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குருப் பெயர்ச்சி ஆகிறது. இதையடுத்து, குருப் பெயர்ச்சி யாகம் நடத்தப்பட்டது.
முன்னதாக, அதிகாலை மங்கள இசையுடன் குருப் பிரார்த்தனை தொடங்கி அனுக்ஞை, கலச, நவக்கிரக ஆவாஹன பூஜை, அக்னி காரியம், குரு பகவான் திவ்ய அபிஷேகம், கோ பூஜைகள் நடைபெற்றன.
சிவாச்சாரியார்கள் மயில்ரங்கம் நாகமணி, வள்ளியிரச்சல் தண்டபாணி, அர்ச்சகர்கள் மகேஷ், பாலதண்டபாணி ஆகியோர் வழிபாடுகளை நடத்தி வைத்தனர். இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலின் பிரதோஷ, தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.