கிராமப்புற முன்னேற்றத்துக்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நவோதயா பள்ளிகளை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுப்படு துரோகம் என இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. கூட்டத்துக்கு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலன், மாநில பொதுச் செயலாளர்கள் என்.முருகானந்தம், சி.பரமேஸ்வரன், டி.அரசுராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவின் இரண்டாம் நாள் நிகழ்வில் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் கலந்து கொண்டு பேசினார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும். அவற்றின் நிதி ஆதாரங்களை முடக்க வேண்டும். தமிழகத்தில் 89 சதவீதம் வாழும் இந்துக்களுக்கு மத சுதந்திரத்தில் சம நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான பிரசாரம் முன்வைக்கப்படுகிறது. மாநில கல்விக் கொள்கையின் தரத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற முன்னேற்றத்துக்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நவோதயா பள்ளிகளை தமிழகத்துக்குள் வரவிடாமல் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நீட் விவகாரத்தில் காட்டிய அலட்சியமே மாணவர்கள் பாதிக்கப்படக் காரணம். மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு பரிந்துரைக்க வேண்டும்.
நமது நாட்டின் இறக்குமதியில் 60 சதவீதம் சீனப் பொருள்கள் வந்து விட்டன. இதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ளூர் பிரிவினை சக்திகளுக்கு சீனா பண உதவி செய்து வருகிறது. எனவே சீனப் பொருள்களை புறக்கணிப்போம். இதற்காக இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. கௌரி லங்கேஷ் படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதுமிருந்து நகர, ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.