திருப்பூர் மாநகராட்சி 13-ஆவது வார்டுக்கு உள்பட்ட கொங்கணகிரி பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
திருப்பூர், கல்லூரி சாலை, கொங்கணகிரி பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் ஏழை, கூலித் தொழிலாளர்கள் ஆவர். இப்பகுதி மக்கள் குடியிருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி தொடர்ச்சியாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா விண்ணப்பம் பெறும் முகாம் வேலம்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 19 முதல் 21ஆம் தேதி முடிய 3 நாள்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை முகாம் நடைபெற்றது.
இதில், கொங்கணகிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைச் செயலாளர் ஒய்.அன்பு, மாநகரக்குழு உறுப்பினர் கே.நாகராஜ், பொறுப்பாளர்கள் ஆர்.வெள்ளிங்கிரி, எஸ்.திருமூர்த்தி ஆகியோர் கொங்கணகிரி பகுதியில் வசிக்கும் மக்களிடம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரும் மனுக்களை பெற்றுப் பூர்த்தி செய்து, அப்பகுதி மக்களுடன் புதன்கிழமை வருவாய் ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.