உடுமலை அருகே வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்காக விலங்கினங்கள் தவித்து வருகின்றன. இதனால் தடுப்பணைகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.
இந்நிலையில், கோடை தொடங்கியதும் வனப் பகுதியில் கடுமையான வெப்பம் தாக்கத் தொடங்கியது. எனவே, குடிநீர்த் தேவைகளுக்காக அடர்ந்த வனப் பகுதிகளை விட்டு விலங்கினங்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வரத் தொட ங்கின.
குறிப்பாக, அமராவதி அணையை நோக்கி விலங்குகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணை நீர்மட்டம் தற்போது வறண்டு உள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை இல்லாததால் அணைக்கு உள்வரத்தே இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இதற்கிடையில் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிக்குள் வனத் துறையினரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைகளும் வறண்டு விட்டன.
விலங்குகள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. எனவே, வனத் துறையினர் லாரிகள் மூலம் வனப் பகுதியில் உள்ள தடுப்பணைகளில் நீரை நிரப்ப வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.