நீர் வழித்தடத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகளை நிறுத்தக் கோரி மடத்துக்குளத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் கிராமத்தில் பழைய ஆயக்கட்டு வாய்க்கால் மூலம் 500- க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் முத்துமாலையம்மன் கோயில் அருகே இருந்து பிரியும் அன்னகத்து கிளை வாய்க்கால் மூலம் சுமார் 250 ஏக்கர் நஞ்சை பூமி உள்ளன. இந்நிலையில் இந்த விளை நிலங்களுக்குச் செல்லும் நீர்வழித் தடப் பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மடத்துக்குளம் பொதுப் பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
விளை நிலங்களுக்கு செல்லும் வழித் தடத்தை மாற்றி அமைத்து கான்கிரீட் சாலை அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலும், முறைப்படி சர்வே செய்யாமலும் தனியாரின் வசதிக்காக நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தீர்மானம் இல்லாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.