வெள்ளக்கோவில் ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயில் நுழைவாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காங்கயம் சாலையில் வெள்ளக்கோவில் நகரின் மையப்பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் அமைந்துள்ளது. உள்ளூர், வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அமாவாசை, பௌர்ணமி, தேர்த் திருவிழா சமயங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
மேலும், விறகுத் தோப்பு காலனி, உப்புப்பாளையம் சாலையில் வசிக்கும் மக்கள் இக்கோயில் வழியாக குமாரவலசு, கல்லாங்காட்டுவலசு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலின் நுழைவாயில் முன்புறம் சாலையை மறித்து சோதனைச் சாவடியில் இருப்பது போல தடுப்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்ல முடிவதில்லை.
இதுகுறித்து உப்புத்துறையைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் கூறுகையில், கோயிலுக்கு வருவதைத் தடுக்கும் வகையில் இந்தத் தடுப்பு உள்ளது. புதிதாக வருபவர்கள் தெரியாமல் சாலைத் தடுப்பில் மோதி விடுகின்றனர். விறகுத் தோப்பு காலனியில் குடியிருக்கும் மக்கள் கோயில் வழியாகச் செல்வதைத் தடுக்கவே தடுப்பு போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அறநிலையத்துறை கோயிலில் இது போன்ற பிரிவினை தேவையில்லை.
எனவே, இடையூறாக இருக்கும் தடுப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.