கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில்- கண்ணபுரம் மாட்டுத் தாவணி புதன்கிழமை (ஏப்ரல் 18) தொடங்க உள்ளது.
கண்ணபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கால்நடைச் சந்தையான மாட்டுத் தாவணி நடைபெற்று வருகிறது. இது கொங்கு மண்டல அளவில் பிரசித்தமானது. இந்த ஆண்டுக்கான மாட்டுச் சந்தை புதன்கிழமை (ஏப்ரல் 18) தொடங்க உள்ள நிலையில், கடந்த இரண்டு நாள்களாகவே சந்தைக்கு வழக்கத்தை விட அதிக மாடுகள் வரத் துவங்கியுள்ளன. காங்கயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேகச் சந்தைக்கு திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து பசுக்கள், மயிலை, செவலை, காரி ரக மாடுகள், கன்றுகள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 2 நாள்களில் மட்டும் 5,500 மாடுகள் வந்துள்ளன. வரும் 27-ஆம் தேதி வரை சந்தை நடைபெறுமென ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் 500 பேர் வந்துள்ளனர். முறைப்படி புதன்கிழமை சந்தை துவங்கவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையே விற்பனை துவங்கி விட்டது.
2 லிட்டர் பால் கறக்கும் மாடு ரூ. 1.25 லட்சம், 8 மாத சினை மாடு ரூ. 90 ஆயிரம், கன்றுகள் ரூ. 50 ஆயிரம் வரை, காங்கயம் காளைகள் ரூ. 4 லட்சம் வரை விலை கூறப்படுகின்றன.குதிரைகள், கலப்பின ஆடுகள், சேவல்கள் ஆகியவையும் சந்தைக்கு வரவுள்ளன. இந்த ஆண்டு ரூ. 20 கோடி அளவுக்கு வியாபாரம் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.