வெள்ளக்கோவில் அருகே திருப்பூர் மாநகராட்சி தற்காலிக ஓட்டுநர் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
முத்தூர், தென்னங்கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் சுரேஷ் (30). இவர், திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்த பிறகு வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில், தென்னங்கரைப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் குளியல் அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது சுரேஷ் எனத் தெரியவந்தது. இவர் வழுக்கி விழுந்து அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.