தாராபுரத்தில் உள்ள நிலவரித் திட்ட அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது பொதுமக்களை பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறது.
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாக கட்டடத்தில் வருவாய்த் துறை சார்பில் நிலவரித் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் நிலங்களுக்கு பட்டா பெயர் மாறுதல் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்தப் பணிகளுக்கு நிலவரித் திட்ட அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், தாராபுரம் அருகே கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் பொள்ளாச்சி சாலையில் வாங்கிய நிலத்தை பட்டா மாறுதல் செய்ய நிலவரித் திட்ட அலுவலகத்தை அணுகினார். இதற்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக செந்தில் அளித்த புகாரின்பேரில் அங்கு பணியில் இருந்த நில அளவையாளர் கார்த்திக்வேல் என்பவரை லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நிலவரித் திட்ட அலுவலகத்தில் ஏற்கெனவே பட்டா மாறுதலுக்காக கொடுத்திருந்த மனுக்களை விண்ணப்பதாரர்களிடமே திருப்பிக் கொடுக்குமாறும், ஆன்லைன் மூலமே பதிவுகள் பெற்று பட்டா பெயர் மாறுதல் சான்றிதழ் வழங்குமாறும் சென்னை நிலவரித் திட்ட ஆணையரிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக இங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்கெனவே பெறப்பட்ட விண்ணப்பங்களை கடந்த 2 நாள்களாக விண்ணப்பதாரர்களிடம் திருப்பிக் கொடுத்து வருகின்றனர். ஏற்கெனவே சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக காத்திருந்த அலைந்தவர்கள் தற்போது மீண்டும் பதிவு செய்து ஆரம்ப நிலைக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.