அவிநாசி நகருக்குள் வராமல் சென்று வந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதையடுத்து அந்தப் பேருந்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவையிலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவிநாசி வழியாக வந்து செல்லும் சில பேருந்துகள் புறவழிச்சாலை வழியாகவே சென்று வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருப்பூரிலிருந்து கோவை சென்ற தனியார் பேருந்து அவிநாசிக்கு வராமல் அவிநாசிலிங்கம்பாளையத்திலேயே புறவழிச்சாலை வழியாகச் சென்றது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தத் தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அவிநாசி போலீஸார், வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில், மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த தனியார் பேருந்தை பறிமுதல் செய்தார்.