சேவூர் வாலீஸ்வரர் கோயிலுக்கு பூட்டு போட்டவரை சேவூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி ஒன்றியம், சேவூரில் பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் பூஜை நடைமுறைகளை முறைப்படி செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் இந்து அறநிலையத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கோயில் நடை சாத்தப்பட்டது. அப்போது பூஜை நடைமுறைகளை முறைப்படுத்தக் கோரி வந்த சேவூர்- சிந்தாமணிபாளையத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் (31) என்ற இளைஞர் பூட்டப்பட்ட கதவின் மீது மேலும் ஒரு பூட்டால் பூட்டிச் சென்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இந்து அறநிலையத் துறையினரும், போலீஸாரும் பூட்டை உடைத்து கோயில் நடையைத் திறந்தனர். இதனால் சேவூரில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவபிரகாஷை கைது செய்தனர்.