தொழிலாளர் நல வாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை, நலத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் திருப்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணி, உடலுழைப்பு, ஓட்டுனர்கள் உள்பட அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில், சிறப்பு முகாம்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொழிலாளர் நலத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) முருகேசன் தலைமையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 17 வகையான தொழிலாளர் நலவாரியங்களின் பட்டியல் அடங்கிய தகவல்கள், அரசின் நலத் திட்ட உதவிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 500-க்கும் மேற்பட்ட பயணிகள், மக்களுக்கு, த நலவாரியங்களில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
மேலும், நலவாரியங்களில் உறுப்பினரானவர்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்ட உதவித்தொகைகள் குறித்தும், 60 வயது நிறைவு பெற்ற தொழிலாளர்கள் மாத ஓய்வூதியம் பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது.