பெண் செவிலியர் மணிமாலா தற்கொலை விவகாரத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி, காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் சங்கத்தினர் உள்ளிட்டோரின் போராட்டம் மூன்றாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள நரிமேடு, அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆர்.மணிமாலா (25). இவர், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 10-ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த குடியிருப்பில் மணிமாலா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மணிமாலாவின் தற்கொலைக்கு, அவருக்கு அளிக்கப்பட்ட மனஉளைச்சலே முக்கிய காரணம் என்றும், அதற்கு இரு பெண் மருத்துவர்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட இரு பெண் மருத்துவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் சங்கம், கிராமப்புற செவிலியர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மணிமாலாவின் உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அவரது உடல் தொடர் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. திங்கள்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையும் மூன்றாம் நாளாக போராட்டம் தொடர்ந்தது. மூன்றாம் நாள் போராட்டத்தில் அரசியல் கட்சியினரும் பங்கேற்றதால் போராட்டம் வலுப்பெற்றது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்களுக்கும், மணிமாலாவுடன் தங்கியிருந்த செவிலியர்களுக்கும் காவல் துறை சார்பில் அழைப்பாணை வழங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய போது, எங்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு, அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது
போராட்டம் தொடரும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளோம் என்றனர்.