வாகன விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததைத் தொடர்ந்து தாராபுரத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சேக் ஒலி (25). மினி ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 5.5.2009 அன்று சுமையை ஏற்றிக் கொண்டு தாராபுரம்- ஒட்டன்சத்திரம் சாலை ரங்கபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவை வந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலலேயே சேக் ஒலி உயிரிழந்தார்.
இது குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சேக் ஒலி குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோரி தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேக்ஒலி குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 44 ஆயிரம் வழங்குமாறு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 25.7.2017 அன்று உத்தரவிட்டது. எனினும், இது வரை நஷ்டஈடு வழங்கப்படாததால் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மடத்துக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, நீதிபதி சரவணக்குமார் உத்தரவின்பேரில் புதன்கிழமை நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.