உடுமலை நகரில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப் பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
உடுமலை சங்கிலி நாடார் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப் பகுதியில் குறுகலாக உள்ள வீதியில் ஒரு வீட்டின் மாடியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இப் பகுதி மக்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை பணிகளை மேற்கொள்ள வந்த ஊழியர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் போலீஸார் அங்கு வந்து அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஏஐடியூசி நிர்வாகிகள் செல்வராஜ், குணசேகரன் ஆகியோர் கூறியதாவது:
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் நிறுவனம் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்கிறது. இந்த கோபுரம் அமைந்தால் குடியிருப்புப் பகுதியில் கடும் கதிர் வீச்சு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. குறிப்பாக, ஒரு வீட்டின் மேல் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க கட்டுமானப் பணிகள் நடந்துவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, அங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வருவாய்த் துறையினர் தடை விதிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியருக்கு இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.