சிவராத்திரி: அங்காளம்மன் கோயிலில் மயான பூஜை

திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் அருகேயுள்ள முத்தணம்பாளையத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் மயான பூஜை நடைபெற்றது. கோயில் அருகே உள்ள மயானத்தில், எலும்பு, மண்டை ஓடுகளால் மயான ருத்ரி ரூபத்தில் காட்சியளித்த அம்மன், வல்லான கண்டனை சம்ஹாரம் செய்தார். கோயில் அருளாளிகள், மண்டை ஓடு, எலும்புகளை ஏந்தி ஆக்ரோஷமாக ஆடினர். வல்லான கண்டனின் குதிரை, யானை, காலாட் படைகளை அழிக்கும் வகையில், கோழி, ஆடு, பன்றிகள் பலி கொடுக்கப்பட்டன. அவற்றின் ரத்தம் கலந்த உணவை அருளாளிகள் ஆவேசத்துடன் உண்ட காட்சியும், ஆடிய காட்சியும், வல்லானை வதம் செய்யும் காட்சியும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 
தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை செம்பு குடத்தில் தேங்காய் முக்கண் கீழ் நோக்கியும், தலைப் பகுதியை மேல் நோக்கியும் வைத்து, அதில் எலுமிச்சம் பழம் வைத்து அம்மன் சக்தி கும்பம் எழுந்தருளிய சக்தி அழைப்பு நடைபெற்றது. கத்தியின் கூர்மையான பகுதி கும்பத்தின் மீது நேராக நிற்கும் அலகு தரிசனக் காட்சியும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கண் விழித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com