மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமண லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள வழிபாட்டுத்தலமான திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். மேலும் உடுமலை, பொள்ளாச்சி, பழனி, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் இங்கு வரத் தொடங்கினர்.
முன்னதாக ஆண்டுதோறும் நடை பெறும் நடக்கும் நிகழ்ச்சியாக மாலை 4 மணி அளவில் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு கிராமத்தில் இருந்து புறப்பட்ட சப்பரம் திருமூர்த்திமலையை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவு 8 மணி அளவில் முதல் கால பூஜைகளும், இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், சிறப்பு அபிஷேகமும்,
தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மங்கள இசை, பாட்டும் பரதமும், தேவராட்டம் மற்றும் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய, விடிய நடை பெற்றன.
புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும், அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து 5 மணி க்கு சிறப்பு அல ங்காரம், தீப தரிசனம், பூஜைகள் நடத்தப்பட்டன. சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை யில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், உடுமலை நகரில் மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.