தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31-ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 30 குழந்தைகள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். அவர்களுக்கு ஆமதாபாத்தில் "குழந்தை விஞ்ஞானிகள்' என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் தியாசபீர், பிரகல்யா, மகாதிரிபுரசுந்தரி, சம்வேத்யா, மாணவர் ஸ்ரீகோவிந்த் ஆகியோர் "நொய்யல் ஆற்றின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருப்பூரிலிருந்து கலந்து கொண்ட இக்குழந்தைகளுக்கு பாராட்டு விழா திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆ.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.