குன்னத்தூர் அருகே கிணற்றில் இருந்து ஓட்டுநர் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
திருப்பூர், போயம்பாளையம், பழனிசாமி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மகன் குமார் (38). இவர் தனது நண்பர்களுடன் குன்னத்தூர், கருணாம்பதி பகுதியில் உள்ள தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு சீட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிறகு அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.
ஆனால், குமார் மட்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் குமார் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநர் குமார் உயிரிழந்தது தொடர்பாக, சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.