காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோயில் தைப்பூச தேர்த் திருவிழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
இந்நிலையில் விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவன்மலை மலைக் கோயில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தாராபுரம் உதவி ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமை வகித்தார். சிவன்மலை கோயில் உதவி ஆணையர் எம்.கண்ணதாசன், காங்கயம் டிஎஸ்பி கிருஷ்ணசாமி மற்றும் தீயணைப்பு, சுகாதாரம், மின்வாரியம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேரோட்டம் நடைபெறும் நாள்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடுதல் பணியாள்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, மின்சார ஒயர்களை பிவிசி பைப்புகள் மூலம் கொண்டு செல்வது, பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவ வாகனங்களை தயார் நிலையில் வைப்பது, தேவையான இடங்களில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்துவது, மலையடிவாரத்தில் நெரிசலைக் குறைக்க தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.