அரசுத் துறைகள் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைகளைப் பெற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாற்றுத்திறன் தன்மையைப் பொருத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 அல்லது வருவாய் துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3000, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ரூ.4000, பட்டப் படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6000 வழங்கப்பட உள்ளது.
மேலும், 9-ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியருக்கான ஊக்கத் தொகையாக ரூ.2000, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவி உபகரணங்கள், சிறப்பு ஆசிரியர்கள் மூலம் சிறப்பு கல்வி வழங்கப்படுகின்றது.
இதுதொடர்பாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருப்பூர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், அறை எண் 515, மாவட்ட ஆட்சியரக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.