திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க மாநில அரசு மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தெரிவித்தார்.
திருப்பூரில் உள்ள மருத்துவ மாணவர் சரத் பிரபு வீட்டுக்கு அரசு சார்பில் ஆறுதல் தெரிவிக்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு, தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2016-இல் எய்ம்ஸ் கல்லூரியில் பயின்ற திருப்பூர் மாணவர் சரவணனும் மர்மமான முறையில் மரணமடைந்தார். தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய மாணவர்களுக்கு தில்லியில் உரிய பாதுகாப்பு இல்லாதிருப்பது தொடர்கிறது.
சரத் பிரபுவின் மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறேன். தில்லியில் உள்ள அரசுக்கும், காவல் துறையிடமும் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியிருக்கிறேன். சுகாதாரத் துறை அமைச்சரும் தில்லியில் பேசி, தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என்றார்.