திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற நபரைக் காவலர் தாக்கியதைக் கண்டித்து பொது மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர், பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் மின் ஒப்பந்ததாரர் முனியராஜ் (29). இவரது மனைவி கீதா. இவர்கள் இருவரும் திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அவிநாசி சாலையில், குமார் நகர், 60 அடி சாலை அருகே சென்றபோது, அங்கேரிபாளையம் சாலையில் இருந்து வேகமாக வந்த காவல் துறை வாகனம், முனியராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதும் வகையில் வந்து நின்றதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த ஆயுதப்படைக் காவலர் அன்பழகனுக்கும், முனியராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காவல் துறை வாகனத்தை விட்டுக் கீழே இறங்கிய ஆயுதப்படை காவலர் அன்பழகனுக்கும், முனியராஜுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், பொது மக்கள் முன்னிலையில் முனியராஜை அன்பழகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீஸார் அன்பழகனை அங்கிருந்து அனுப்பி வைத்தனராம். இதனால் அதிருப்தியடைந்த பொது மக்கள், தாக்குதலில் ஈடுபட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 60 அடி சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.