தில்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடல் திருப்பூரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது.
திருப்பூர், பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி.செல்வமணி. இவரது மகன் சரத் பிரபு (24). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர் தொடர்ந்து, தில்லியில் அரசால் நடத்தப்படும் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (யுசிஎம்எஸ்) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் சேர்ந்து படித்து வந்தார்.
தில்லியில், தில்ஷாத் கார்டன் பகுதியில் தங்கி வசித்து வந்தவர், கடந்த புதன்கிழமை காலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த அவரது உடலுக்கு தில்லியில் வியாழக்கிழமை உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அவரது தந்தை செல்வமணி உள்ளிட்டோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல், தில்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலமாக வியாழக்கிழமை எடுத்துவரப்பட்டது.
இதுகுறித்து சரத் பிரபுவின் குடும்பத்தார் கூறியதாவது:
சரத் பிரபுவின் உடல் கோவை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, அதன்பின் திருப்பூர் எடுத்து வரப்படவுள்ளது. தொடர்ந்து, திருப்பூர், ஏ.பி.டி. சாலையில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை காலையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதுவரை அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து தில்லி போலீஸார் எவ்விதத் தகவல்களும் தெரிவிக்கவில்லை. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே அதுகுறித்து தெரியவரும். தமிழக அரசு சார்பில் தில்லியில் எங்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டன என்றனர்.