பல்லடத்தில் முருக பக்தர்கள் பேரவை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு முருக பக்தர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இமைகள் கண் தானக் கழகத் தலைவர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர் ஈஸ்வரன், வனம் இந்தியா அறக்கட்டளைத் தலைவர் சுவாதி கண்ணன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தா செல்வராஜ், வாழும் கலை நிர்வாகி தங்கலட்சுமி நடராஜன், கேபிள் சக்தி, தினேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், திருப்பூர் மற்றும் பல்லடத்தில் இருந்து பழனிக்கு பாத யாத்திரைக் குழுவினர் நடந்து செல்லத் தனி நடைபாதை அமைத்துத்தர வேண்டும். சாலை விபத்தில் உயிரிழந்த முருக பக்தர்கள் குடும்பத்தாருக்கு அரசு தலா ரு.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். சாலை விபத்துகள் நிகழாதவாறு காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கள்ளக்கிணறு முதல் குண்டடம் வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோர நடைபாதையை ஜனவரி 20-ஆம் தேதி தூய்மைப்படுத்துவது.
பாதயாத்திரை செல்லும் 10 ஆயிரம் முருக பக்தர்களுக்கு இருளில் மின்னும் பட்டை மற்றும் அன்னதானம், குளிர்பானம், சுக்கு காபி, சிற்றுண்டி, குடிநீர் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.