மடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 57 படுக்கைகள் கொண்ட பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைக்கான அரங்கு என 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1.65 கோடியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுமானப் பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் கட்டுமானப் பணிகளை முடிக்கவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்த அமைச்சர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடுமலை அரசு மருத்துவமனையில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் 140 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் ஒரு சிறப்புப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். அதில், தீவிர சிகிச்சை பிரிவுவும் அமைக்கப்படும். மேலும் ஏழை, எளிய மக்கள் பலன் பெறும் விதத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்படும்.
இதேபோல, மடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் 57 படுக்கைகள் கொண்ட புதிய பிரிவும், நவீன அறுவை சிகிச்சை அரங்கும் கட்டப்பட்டு வருகின்றன. 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரைவில் கட்டுமான பணிகள் முடிவுற்று பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார்.
முன்னதாக உடுமலையை அடுத்துள்ள கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, இருதய நலப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத் தார்.
இந்த ஆய்வில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் கோமதி, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் அசோகன் மற்றும் துறை அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.