அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்படும் என திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆவணங்களை ஆய்வு செய்ததில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்பட ரூ. 50 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல சொத்துக்கள் விதியை மீறி, போலி ஆவணம் மூலமாகக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுக்கு அரசியல் மற்றும் ஆட்சியாளர்கள் செல்வாக்கு பெற்ற
இடைத்தரர்களே காரணம். இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்தி, முறைகேடுக்குத் துணை நின்ற இடைத் தரகர்கள், அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்படும். கோயில் சொத்துகள் முழுமையாக மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவருடன் அவிநாசி வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், கோயில் செயல் அலுவலர் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.