வெள்ளக்கோவிலில் காவிரிக் குடிநீர்க் குழாய் உடைப்பால் தார் சாலை சேதமடைந்தது.
கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் வெள்ளக்கோவில் கல்லுக்குட்டை மேடு நீருந்து நிலையத்துக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
வெள்ளக்கோவில் பிரதான கடை வீதி நான்கு சாலைச் சந்திப்பு அருகில் தாராபுரம் சாலையில் குடிநீர்க் குழாய் அதிக அழுத்தம் காரணமாக உடைந்தது. இதில் தார் சாலை சேதமடைந்து சுமார் இரண்டடி பள்ளம் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் குடிநீர்க் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேதமடைந்த சாலை விரைவில் சீரமைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.